மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?
இறப்பு என்பது இயற்கை! சாகாமல் இருக்க வேண்டும் என்று அலைபவன் முட்டாள் என்று கூறப்படுகிறதே! மரணமில்லா பெருவாழ்வு இயற்கைக்கு எதிரானதா? இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் மறைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால் மரணமில்லா பெருவாழ்வு தான் ஒரு ஜீவன் பெற்றுக் கொள்ளுகின்ற கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது ஏன்?
பதில்:-
மனிதர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறிதளவு ஆறாம் அறிவு ஆகிய பகுத்தறிவை கொடுத்ததற்கே இந்த அளவு ஆணவத்தால் போராடுகிறார்கள். இந்த உலகையே படைக்கும் வல்லமை உடைய இறைவனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பேரறிவு முற்றறிவு என்று சொல்கின்றோம்.
நாய் குட்டி நாய் ஆகின்றது. பூனை குட்டி பூனை ஆகின்றது. குதிரை குட்டி குதிரை ஆகின்றது. அவ்வாறே கடவுளுடைய குட்டி ஆகிய நாம் கடவுளாக நிலை மாற்றமடைய வேண்டும். அதற்கு பேரறிவு தேவை. அதையே மெய்ஞானம் என்கிறோம். அந்த மெய்ஞானத்தை அடைய முடியாத பொய் ஞானத்தை உடைய முட்டாள்கள் பேசும் பேச்சு தான் மரணம் இயற்கை என்பது.
நீங்கள் ஜீவன்முக்தர் களையும் சித்தர்களையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய கருத்தை சிந்தித்து இருப்பதாலேயே இவ்வாறு கூறுகிறீர்கள். சீவன் முத்தர்களும், சித்தர்களும் இந்த உடலை விட்டுவிட்டு அல்லது நெடுநாள் இந்த உடலை வைத்துக்கொண்டு இருந்து ஜீவ சமாதி கட்டி விட்டு சென்றவர்கள்.
அவர்கள் உயர்ந்த நிலை ஆகிய மரணமிலாப் பெருவாழ்வு கைவரப் பெறாதவர்கள். ஆனால் இந்த உடலைப் பற்றிய முழுமையான ஞானம் ஆகிய மெய் ஞானத்தை அடைபவர்கள் மனித உடலை மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகள் உடைய உடலையும் நினைத்தபோது உருவாக்கவும் அழிக்கவும் கூடிய வல்லமை பெறுகிறார்கள். இதுவே மரணமில்லா பெருவாழ்வு
சைவ சமய நால்வர் பெருமக்களும், வள்ளலாரும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்தார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு என்பது நம் உடலை நினைத்தபோது உருவாக்கவும் அழிக்கவும் கூடிய ஒரு உயர்ந்த வல்லமை. மரணமில்லாப் பெருவாழ்வுக்கும் சாவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத முட்டாள்கள் தான் இவ்வாறு சொல்கிறார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு என்பது இந்த உடலையே நீண்டநாள் வைத்துக்கொள்ளும் முட்டாள்தனமான ஒரு முயற்சி அல்ல. இந்த உடலை நாமே கட்டமைக்கவும் தவிர்க்கவும் கூடிய திறமைதான் மரணமில்லா பெருவாழ்வு என்றும் கடவுள் நிலை சேர்ந்த அனுபவம் என்றும் கூறுகிறோம்.
நமது வள்ளல் பெருமானும், சைவசமய நால்வர் பெருமக்களும் அடைந்த யாரும் பெற்றிராத இந்த நிலையை சிந்திக்கக் கூட முடியாத ஜீவன் முக்தர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் புத்தர்கள் சமணர்கள் மற்றும் ஓஷோ ,ஜேகே போன்ற வெறும் வாய்ச்சவடால் பித்தர்கள் கட்டிய கதை தான் இந்த சாவு என்பது இயற்கையானது என்ற கொள்கை.
புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என்று பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் வெறும் வாய்ச்சவடால் பித்தர்களுக்கும் சவால்விடும் வள்ளல்பெருமான் உடைய கருத்தை சிந்திக்கக்கூடிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் மற்றும் சைவ சித்தாந்த கருத்துக்களை ஆராய்ந்து கடைபிடிக்கும் ஒழுக்கமுடைய நண்பர்கள் மட்டுமே இந்த மரணமிலா பெருவாழ்வை பெற்றுக் கொள்ளக்கூடிய தகுதியை அடைகிறார்கள்.
சைவ சன்மார்க நெறி நின்றார் மரணமிலாப் பெருவாழ்வில் நீடுவாழ்வார்!!! மற்றையார் வெந்து சாவார்!!
இத்தகைய பெருமை வாய்ந்த மரணமில்லா பெருவாழ்வை அல்லது கடவுள் நிலையை தரும் தசகாரிய வாசியோக சாகாக் கல்வியை தமிழர்களாகிய நாம் மறந்து விடக் கூடாது.
சிவபெருமானே முன்னின்று வள்ளல் பெருமானுக்கும், சைவ சமய நால்வர் பெருமக்களும் கற்றுக்கொடுத்த தசகாரிய வாசியோக சாகாக் கல்வியை கற்று மரணமிலாப் பெருவாழ்வு அடைய நாம் பாடுபடவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்களின் கல்வி சாகாக் கல்வியே!!! எஞ்ஞான்றும் சாகாமல் இருக்க கற்பதுவே கல்வி!!
-- யோகி ஆடலரசன் ஐயா
நிறுவனர்:- வாகீசர் தசகாரிய வாசி யோக பயிற்சி மையம் மற்றும் சன்மார்க்க யோக சேவை இயக்கம். திருக்கோவிலூர்
Comments
Post a Comment